Monday, September 1, 2014

ஆவிகளுடன் பேசுவது எப்படி?- 2


இந்த சம்பவம் நடைபெற்றது சில காலங்களுக்கு முதல் ஆகும்.

வேலை நிமிர்த்தம் நண்பர்களுடன் தனியாக ஓர் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம்.
அந்த கால நாற்சதுர வீடு. வீட்டுக்குள்ளேயே முற்றம். ஒருஅறையில் மரப்படிக்கட்டுகள் ஏறிபார்த்தால் மேலே பரண் அதில் பழைய தட்டு முட்டு சாமான்கள். 

பகலில் நிறையபேர் வந்து போனாலும் இரவுகளில் மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே தங்கி நிற்பது வழக்கம். ஹாரர் மூவி செட் மாதிரியே இருக்கும். 


வீட்டுக்கு முன்னாலேயே கொக்குவில் மார்க்கெட் இருந்ததால் அங்கு கொண்டுவந்து விடப்படும் அநாதை பூனைக்குட்டிகளும் எம்முடனே தங்கும்.

பெரும்பாலும் நடுசாமம் தாண்டியும் பேசிக்கொண்டிருப்போம்.
இரவு இரண்டு மணிக்கு இரணுவ்தினர் ரோந்து செல்வார்கள்.
அதிகாலை மூன்று மணி ஆனால் அருகிலுள்ள பாண் பேக்கரிக்கு போய் கறி பணிஷ், ஜாம் பணிஷ் ஏதாவது வாங்கிவந்து சாப்பிட்டுக்கொண்டிருப்போம்.
நான்கு மணிக்கெல்லாம் அன்றய தினசரி பத்திரிகைகள் எம் வாசலில் போட்டுவிட்டு போவார்கள் அருகிலுள்ள கடைக்காரருக்கு வரும் ஆடர் அது. கடைவாசலில் போட்டால் ஏழுமணிக்கு கடைகாரர் வருவதற்குள் களவாடிவிடுவார்கள் என்பதால் நம் வீட்டிற்குள் போட்டுவிட்டு போவார்கள். அந்த பத்திரிகை கட்டுகளிலிருந்து ஆளுக்கு ஒவ்வொன்றை எடுத்து படித்துவிட்டு மறுபடி சொருகி வைத்து விட்டு தூங்கிவிடுவோம். சில நேரங்களில் மறுபடிவைக்காமலே கடைக்காரர் எடுத்து போய் விடுவார்.

காலையில் எட்டுமணிக்கு வேலைக்கு வரும் பையன் நம்மை எழுப்பி திறப்பை வாங்குவான்.

இப்படியான இரவுகளில் ஒருநாள் ஆவிகளை பற்றிய பேச்சு வந்தது. 
அங்கு வந்து போகும் ரவி என்பவனுக்கு முன்னொருநாள் க்ரவுண்டில் விளையாடும் போது ஆவி ஒன்று அவன் உடலில் புகுந்ததாகவும். அதனால் அவன் வினோதமாக நடந்துகொண்டதாகவும் நண்பர்கள் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குள் தூக்கிசெல்ல முயன்ற வேளை முருகன் என் எதிரி நான் உள்ளே வரமாட்டேன் என கத்திவிட்டு மயங்கியதாகவும் கூறினார்கள். அவனோ தனக்கு மயங்கியதை தவிர எதுவும் நினைவில்லை என்றான். பிறகு தனியாக ஒருநாள் என்னிடம் ஆவி புகுந்ததற்கான காரணம் என ஒரு சம்பவத்தை கூறினான் அதுபற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

அன்றிரவு மற்றவர்கள் தூங்கியதும் இணையத்தில் ஆவிகளுடன் பேசுவது எப்படி என ஆங்கிலத்தில் தேடி ஔஜா பலகை என்ற வழிமுறைபற்றி அறிந்து மற்றவர்களுக்கு காட்டினேன். 

அது என்னான்னா ஒரு பெரிய்ய மட்டயைில் A-Z  வளைவாக எழுதப்பட்டு கீழே எண்களும் இடப்பட்டிருக்கும். மேலே சூரிய சந்திரர் படங்களுடன் ஆம் இல்லை என இருக்கும்.
இதில் ஒரு கண்ணாடி டம்ளரை இருவர் அல்லது மூவர் தொட்டபடி ஆவிகளிடம் கேள்வி கேட்க தேவையான எழுத்துகளின் மேல் டம்ளர் நகர்ந்து பதில் வரும்.

இதை செய்யும் போது இரவு நிசப்தமாக இருக்க வேண்டும்.

ஒற்றை மெழுகுவர்த்தி வௌிச்சம் மட்டுமே இருக்கவேண்டும்.

பேசிக்கொண்டிருக்கும் போது ஆவி சம்மதித்து குட் பாய் சொல்லி போவதாக கூறாமல் நாமாக இடையில் விலகினால் அது அங்கேயே யாரிலாவது தங்கிவிடும்.

ஆவி அடம்பிடித்தால் அவரவர் மத கடவுளின் ஜெபம், தேவாரம், தொழுகை ஏதாவது செய்ய வேண்டும்.

ஆல் கண்டிஷன்ஸ் அப்ளையுடன் இந்த பலகையை மறுநாள் பன்னிரண்டு மணிக்கு செய்வதென முடிவுசெய்யப்பட்டது.
வழக்கமாக எம்முடன் நிற்கும் இருவர் விஷப்பரீட்சைக்கு பயந்து அன்று வரவில்லை. இதை கேள்விப்பட்டு புதிதாக மூன்று நண்பர்கள் எம்மோடு இரவு நிற்பதற்கு வந்திருந்தார்கள்.

12மணிவரை சீட்டாடுவோம் என உக்கார்ந்தோம்.
நாம் தூங்கும் அறையில் கட்டில் ஒன்று அருகில் பெரிய மின்விசிறி ஒன்று அதை ஆன்செய்தால் புயலடிப்பது போல இருக்கும்.
மல்ட்டி ப்ளக்கில் விதவிதமான போன் சார்ஜர்கள் கட்டிலிலேயே பிசியாக இருக்கும். மேஜையில் லாப்டாப்கள், ஸ்பீக்கர். வைஃபை, நாய் பிஸ்கட், அருகில் ஒரு முயல் கூடு, சீடி தட்டு அன்ட் சீட்டு கட்டு.


'முதல்முறை பார்த்த ஞாபகம் மனதினில் தந்து போகிறாய்...' பாடல் அறை ஸ்பீகரில் ரண்டமாக தொடர்ந்து ஒலிக்கிறது சீட்டு விளையாடிக்கொண்டிருந்தோம்.

இரவு பதினொரு மணி. 

அன்று தான் கேகேஎஸ் வீதிக்கு புதிாக கார்ப்பெட் போட்டு வாகனங்கள் போகாதபடி ஒருபுறம் தார்பீப்பாய்களை அடுக்கி டேப் கட்டியிருந்தார்கள். எனவே வாகனங்கள் வராது என்பதால் என் பைக்கை வாசலில் வீதியிலேயே நிறுத்தியிருந்தேன்.
நாம் விளையாடுவது சீட்டில் 532 என்ற ஐட்டம். 

வெல்லபோகும் தருணம் அந்த பாடலை உரக்க பாடியபடி விளையாடிக்கொண்டிருக்க தெருவில் 'தடால்!' என்ற ரெுஞ்சத்தம் கேட்டது.
கட்டிலிலிருந்து அனைவரும் பாய்ந்து சென்று பார்த்தால் ஆட்டோ ஒன்று புரண்டு போய் கிடக்கிறது.

இரண்டு அடி இடைவெளியில் என் பைக்(ஜஸ்ட்டு மிஸ்ஸாகியிருந்தால் காய்லாங்கடைக்கு போட்டிருக்கவேண்டியதுதான்). தார் பீப்பாய்கள் உருண்டு கொண்டிருந்தன. நான் வீட்டுக்குள்ளே சென்று முகப்பு லைட்டை ஆன் செய்து விட்டு வந்து பார்த்தால் ரவியும் மற்ற நண்பர்களும் ஆட்டோவை நிமித்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆட்டோ அப்பளம் போல் நொருங்கி கிடக்கிறது, ஆட்டோ நிமிர உள்ளேயிருந்துஇரு உடல்கள் தெருவில் விழுகிறது. ஒருவனின் தலை முற்றிக பிளந்து ரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது மற்றவனது கால்கள் உடைந்து போயுள்ளது.

ரவி உள்ளே போய் சீட்டாட விரித்திருந்த துணிகளை எடுத்துவந்து அடிபட்டவன் தலையை சுற்றி கட்டுகிறான். அவர்களோ இரத்தம் வருவது கூட தெரியாதளவுக்கு போதையில் இருக்கிறார்கள். கால் முறிந்தவன் வீதியில் கிடந்தபடியே மற்றவனை பார்த்து 'மச்சான் கலையனாகபோகுது எழும்பு போவம்' (அவன் ஆல்ரெடி போய்ட்டான்)என்றுவிட்டு நம்மை பார்த்து 'அண்ணை என்ன ஒருக்கா கழுவி ஆட்டோ டரைவர் சீட்ல இருத்தி விடுங்கோ' என்கிறான்.

இதற்குள் சனம் திரண்டுவிட்டது.
நாம் ஆம்புலன்ஸக்கு போன் செய்தால் அவர்கள் ஆர அமர அட்ரஸ் விசாரித்து கொண்டிருந்தார்கள்.

அடுத்து வந்த ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பவும் போலிஸ் வரவும் சரியாகவிருந்தது.
இவர்களை மோதிய வான் சிறிதுதூரம் தள்ளி நின்று இன்சூரன்ஸ் ஏஜன்டை வரவைத்து போட்டோ எடுத்து கொண்டிருந்தார்கள்.
போலிசார் அவசரத்தில் ஆக்ஷிடன்ட் ஆன் ஆட்டோவை இன்னொரு பட்டா குட்டியானையில் ஏற்ற முயல அது உள்ளே நுளைய மாட்டேன் என்றது ஓர் இரும்பு கம்பியை எடுத்து நாலாபுறமும் அடித்து சப்பையாக்கி நுளைத்து கொண்டு புறப்பட்டார்கள்.
ஏற்கனவே வீதி திருத்த வேலைகளால் ஒருபுறம் மட்டுமே போக்குவரத்துக்கு விட்ட சாலையில் விபத்தும் சேர ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல் உருவாகிவிட்டிருந்தது.

இந்த களோபரத்தில் அடிபட்டவர்களின் செல்போனிலிருந்து ஆட்டோ பற்றறி வரை அங்கு வந்த சிலர் ஆட்டையை போட்டிருந்தார்கள்.
முன்னால் சந்தை கட்டட வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து ஸ்ரேடியத்தில் மேச் பார்ப்பது போல இவற்றை பார்த்து கொண்டிருந்தார்கள்.

பாதை சகஜமாக இரவு ஒன்றரை ஆனது
நாம் நமக்குள் எதுவும் பேசிக்கொள்ளும் மனநிலையில் இல்லை. 

ஹாஸ்பிட்டல் போனவர்களுக்கு என்னாயிற்று என யோசித்தபடி இருக்க அதிகாலை நான்கு மணி அன்றய பத்திரிகைகள் வந்தது.
அதில் போட்டோவுடன் இந்த செய்தி வந்திருந்தது. ஒருவர் வரும் வழியில் இறந்து விட்டதாகவும் மற்றவர் படுகாயம் எனவும் விபத்து படத்தின் பின்னணியில் நம் வீடு. 

இறந்தவனிடம் கடைசியாக பேசி அவனுக்கு தலையில் துணி சுத்தி தண்ணீர் தெழித்தது ரவிதான்.

மறுநாள் இரவும் ஆவியுடன் பேசிபார்ப்போம் என்று 12மணிவரை வீட்டின்பின்புறம் காத்திருந்தோம். 

மற்றவர்களுக்கு உள்ளுக்குள் உதறினாலும் இதல்லாம் நடவாத காரியம் என எம்மை கலாய்த்து கொண்டிருந்தார்கள். 

அந்த நேரம் நானும் விது என்பவனும் திட்டமிட்டு தண்ணீர் போத்தல் எடுப்பதாக கூறி அங்கிருந்து வந்து வீட்டின் ஃபியூஸை புடுங்கிவிட்டு கூரை மேல் கற்களை எறிய நம்மை கலாய்த்தவர்கள் அலற ஆரம்பித்தார்கள். 

மீண்டும் கரண்டை கனக்ட் செய்து விட்டு அவர்களை பார்த்த போது மாறிமாறி கட்டிப்பிடித்தபடி இருந்தார்கள் போனில் சத்தமாக அம்மன் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

அடுத்து ஒளஜா பலகையை தயார் செய்து மேஜைமீது வைத்து டீ குடிக்கும் டம்ளரை எடுத்துவந்து லைட் ஆஃப் செய்து மெழுகுவராத்தி ஏற்றி நானும் ரவியும் விதுவும் டம்ளரில் கைகளை வைத்து 'யாராவது இருக்கீங்களா?' என விது கேட்க பலத்த நிசப்தம்.
நான் கையை வைத்திருந்ததன் நோக்கம் அது தானாக நகருமா இல்லை இவர்கள் யாராவது நம்மை கலாய்க்க நகர்த்துவார்களா என பார்க்கவே! அப்படி நகராவிட்டால் நானே நகர்த்தலாமென உத்தேசித்திருந்தேன் தொடர்ந்து கேட்டு கொண்டிருந்தான். எந்த மூமென்டும் இல்லை

மெழுகுவர்த்தி உருகிகொண்டிருக்கிறது... 

மற்றயவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருக்கிறார்கள்... 

விது தமிழ் ஆங்கிலம் என மாறி மாறி அதே கேள்வியை கேட்டுகொண்டிருக்க, டம்ளர் நகர ஆரம்பித்தது கடிகாரத்தில் நிமிடமுள் நகரும் வேகம். ஒரு எழுத்தைதாண்டிய பிறகே அது நகர்ந்திருப்பதை ஊகிக்க முடியும்.
ஆம் என்ற பகுதியில் டம்ளர் வந்து நின்றது. 

ஒரு மெழுகுவர்த்தி முடிந்து அடுத்ததை ஏற்றினார்கள். அடுத்து 'உங்க பேரென்ன?' என யாழ்ப்பாண தமிழ், இந்திய தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மாறிமாறி கேட்டு பார்த்தான் டம்ளர் நகர்வதாக காணோம்.

நான் பொறுமையிழந்து கையை எடுத்து விட்டேன். 

நீண்ட காத்திருப்புக்குபிறகு முடிப்பம் என கூறி தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாணாடு எல்லாம் பாடி விட்டு மற்றவர்களும் கையை எடுத்தார்கள். 

விது அன்ட் ரவியை பார்த்தால் இவர்களுக்கு தேவாரம் என்று ஒரு ஐட்டம் இருக்குன்னு தெரியுமாங்கற மாரி இருக்கும். ஆனா கரக்ட்டா அதல்லாம் மனப்பாடம் பண்ணி நடுச்சாமத்துல பாடிருக்கானுங்க.

என்னுடைய டவுட் : டம்ளர் தானா நகர்ந்ததா இல்ல இவனுங்க கையால தள்ளினானுங்களா?

ரவின்ட டவுட்: வந்தது ஆட்டோல வந்தவன் ஆவியா? அது போயிடிச்சா இல்ல இங்கயே தங்கிடுச்சா?

விது டவுட்: நான் பேசினது ஆவிக்கு சரியா புரியலயோ? சிக்னல் வீக்காருக்குமோ?

மற்ற நண்பர்களுடைய டவுட்: இவனுங்க கிறுக்கனுங்களா? இல்ல நம்மள கிறுக்கனாக்கறானுங்களா?

மறு நாள் இரவு எடுத்த வீடியோவ பாத்த மத்த நண்பர்கள் சொன்னானுங்க மச்சான் அடுத்த வாட்டி பொம்பள பேய்ங்கள கூப்டு பேசுங்க. நாங்களும் பாக்க வாரோம்(ங்கொய்யால பேய்ல கூடவா!!!?)


இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails