Friday, October 28, 2016

அவள் ஏன் கொஞ்சம் குடிக்கிறாள்? - யாழ்ப்பாணத்து முக்கிய நபரின் பின் கதை!

'முக்கிய விடையம்' பற்றி பேசுவதற்கு முன் ஒரு மூன்று வருடத்திற்கு முந்தய சின்ன ஃப்ளஷ்'back'

அப்போது தொழில் நிமிர்த்தமாக குளப்பிட்டி சந்தி பகுதியில் ஓர் வீட்டினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த காலம்!

எனது வீடு அருகிலிருந்ததால் நான் காலை கடன், குழியல் என்பவற்றுக்காக வீட்டுக்கு சென்று வருவதால் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு தண்ணிவசதி செய்திருக்கவில்லை.

வேலை முடிந்த மாலை வேளைகளில் அரட்டையடிப்போம் நமது அரட்டை குழுவில் இருந்த செந்தூரன் என்ற நண்பனால் அவனது நண்பன் 'சிவா' அறிமுகம் செய்து வைக்கப்பட்டான்.



சிவா வவுனியாவை சேர்ந்தவன் வேலை நிமிர்த்தமாக யாழ்ப்பாணம் வந்து கொக்குவிலிலுள்ள அவனது உறவினர் வீட்டில் தங்கியிருப்பவன்.
உறவினர் வீட்டில் பொழுது போகாததாலும் வேறு நண்பர்கள் இங்கு இல்லாத்தாலும் பெரும்பாலும் அவனுக்கு வேலை இல்லாத நாட்களில் காலையிலேயே நமது வேலைத்தளத்திற்கு வந்துவிடுவான்.

சிவா பார்ப்பதற்கு ஆறடி உயரமாகவும் பருமனாகவும் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் நான்கு நாட்கள் மழிக்காத தாடியுடனும் மேவி தலை சீவியும் இருப்பான், வாய் வெற்றிலை காவி படிந்து சிவந்திருக்கும்.

இப்படி இலக்கியத்தனமாக வர்ணிச்சு உங்களை வெறுப்பேத்தாமல் சுருக்கமா எங்கட தமிழ்ழ சொன்னா 'பாக்க மாடு மாரி இருப்பான்'

ஒரு நாள்...

காலை ஒன்பது மணியளவில் உறவினர் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள நமது இடத்திற்கு நடந்து  வந்திருக்கிறான்.

அதுக்கு முதல்நாளிரவு அவன் சாப்பிடுற 'அரியண்ட விலாஸ்'ல என்ன டின்னர்னு தெரியல ஆனா அது ஏதோ சிக்கலை குடுக்க சிவாவுக்கு உபாதை ஆரம்பித்திருக்கிறது!

உண்மையில் அந்த உணவு கடைக்கு வேற ஏதோ பெயர், ஆனால் கடைமுதலாளி சேட் போடாமல் சாரத்துடன் வேர்க்க வேர்க்க நின்றபடி கையால் சாம்பல் அள்ளி அடுப்பை எரித்து உடலை சொறிந்து அதேகையால் காய்கறி வெட்டி சமைத்து அதே கையால் உணவு பதிமறுவதால் நாம் அந்த கடைக்கு 'அலியண்ட விலாஸ்' என பெயரிட்டுள்ளோம். 

ஆடியபாதம் வீதியில் ரயில் கடவைக்கு முன்னால் ஒரு மில்லுக்கும் போட்டோகொப்பி கடைக்கும் நடுவிலிருக்கிறது. 

உங்களுக்கு துரோகிகள் யாருமிருந்தால் அங்கு கூட்டி சென்று விருந்து வையுங்கள்.

பொதுவாக கண் இருக்கிற யாரும் அங்கு சாப்பிடுவதில்லை சிவா சிகரட் பிடிக்ககூடிய இடம் கடையின் பின்னாலிருப்பதால் அங்கு போவான்.

அங்கு முதல்நாளிரவு சாப்பிட்ட சிவா காலை உபாதையுடன் நடந்து வருகிறான்.

மனுசனெண்டா உது சகஜம் தானே முக்காவாசி தூரம் நடந்து வந்திட்டமே இனி திரும்பி நடக்கிறத விட குளப்பிட்டி வீட்ட போறதுக்குள்ள சரியாயிடும் எண்டு நினைச்சு வந்திட்டான்.

அங்கு நமது சக பணியாளர் ஒருவர் தரையை 'மொப்' செய்து துடைத்தவாறு நின்றவர் இவனை கண்டதும்,

'டேய் சிவா! நான் கீழ இறங்கி வந்தா கால்ல மண் பட்டுடும் இந்த மொப்பர் வாளிய கொண்டுபோய் பக்கத்து வீட்டு முன் பைப்பில தண்ணி எடுத்து வா'

'இப்ப என்னால உதல்லாம் செய்யேலாது கொஞ்சத்தால போறன் சும்மா இர்றா' 

பிசியானவன் போல முகத்தை வைத்துக்கொண்டு தன் உபாதையை காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்த செய்தி தாளை புரட்டியபடி நாற்காலியில் அமர போனான்.

'அப்ப நீ இஞ்ச உன்ர பொழுது போக்குக்கு தான் வாறனியே ஒழிய எங்களுக்கேதும் உதவி கேட்டா செய்ய மாட்டாய் என்ன? நேற்றும் என்ர பைக்க வாங்கிகொண்டு இணுவிலுக்க ஆரோ பெட்டய பாக்க போன்னி! இனி பைக் கேட்டு பார்'

என்னடா இது சத்திய சோதனை என்றெண்ணிய சிவா எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் மொப்பர் வாளியை வாங்கிக்கொண்டு கம்பீரமாக சிங்க நடை நடந்தான்.

அடுத்தவீட்டு பைப்பை திறந்து மொப்பர் வாளியை வைத்தவனின் ஆழ்மனது சிந்தனைகள் குபு குபுவென கொட்டியது.

உவங்களுக்கு என்ர பிரச்சனைய சொன்னா நக்கலடிப்பாங்கள், 

அதுவா சரியாயிடுமெண்டு நினைச்சாலும் உபாதை ஆர்முடுகி செல்லுதே ஒழிய குறையிற மாரி தெரியேல்ல,

பக்கத்தி வீட்டு அன்ரிய கேட்டுட்டு அவைன்ர வீட்ட போகலாமெண்டா அங்க ஒரு வடிவான பெட்டை இருக்குது, அன்ரிண்ட மேள். அது தற்சமயம் கண்டா இனிமேல் என்னை பாக்கேக்க என்ன நினைக்கும்? அண்டைக்கு தான் கொஞ்சம் சிரிக்கிற மாரியே பாக்க தொடங்கியிருக்கிறாள்.

மொப்பர் வாளி தண்ணிய கொண்டு குளப்பிட்டி வீட்டுக்கு பின்னால ஏதும் பத்தைக்க, அல்லது பாலத்துக்க ஒதுங்குவமெண்டா முன்னுக்கு ஒருத்தன் வாளிய தந்திட்டு பாத்துக்கொண்டு காவல் நிக்கிறான்.

பொட்டம்மான் ரேஞ்சுக்கு திட்டம் போட்டாலும் சட்டென எதுவும் செய்வது சாத்தியமில்லையென எண்ணி மொப்பர் வாளியை தூக்கி கொண்டு மிகமெதுவாக திரும்பி நடக்கிறான்.

இப்போது அவன் உடல் உபாதையால் வடிவேலு டான்ஸ் ஆடும்போது இருக்கும் பின்புறம் போல சற்று வளைந்து காணப்படுகிறது.

வாளியை கொடுத்துவிட்டு சத்தமில்லாமல் மீண்டும் கே.கே.எஸ் வீதிக்கே வந்தவன் பஸ் ஒன்று போவதை கண்டு தன்னையறியாமல் அருகிலிருந்த பஸ் தரிப்பிடத்தை நோக்கி மிக மெதுவாக நகர்கிறான்.

ஐடியா! யாழ்ப்பாணத்தில அவனுக்கு தெரிஞ்ச ப்ப்பிளக் ரொய்லட் ரவுணுக்க பஸ் ஸ்ராண்டுக்க இருக்குது. 

ஒரு பஸ்ஸில ஏறி சீட்டில இருந்தாலே பாதி ரணம் சரியாயிடும் பஸ்ஸில அங்க போனா எல்லாம் ஓகே!

மெய்ன் ரோட் எண்டதால பஸ்ஸுகளும் அடிக்கடி வாறது தானே!

அதிரடி முடிவெடுத்து பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்தவனுக்கு வெய்யில் படவே உபாதை உச்ச கட்டத்தை அடைந்தது.

குளப்பிட்டி பஸ் தரிப்பிடத்திற்கு கூரையே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் வியர்த்து, முகம் இறுகி, கண் சோகமாய், நா வறண்டு, கால் நடுங்கி கொண்டு நின்றவனுக்கு அண்டைக்கெண்டு பாத்து ஒரு பஸ்ஸும் வாற மாதிரி தெரியேல்ல!

அந்த நேரம் பார்த்து தொலைபேசி அழைக்க போனில் அவன் நண்பன் செந்தூரன்.
கட் செய்தவனுக்கு மீண்டும் மீண்டும் செந்தூரன் அழைக்கவே போன் பேசினால் சிந்தனை சிதறடிக்கப்பட்டு உபாதை குறையுமென எண்ணி ஆன்சர் செய்கிறான்.

'டேய் சிவா போன கட்பண்ணுறாய் என்ன #%^*$>€! எங்க நிக்கிறாய்?'

'குளப்பிட்டி வீட்ட வந்தனான்டா அலுவலா நிக்கிறன் பிறகு திருப்பி எடுக்கிறன் உனக்கு'

'போ €%^*#¥! என்னோட வந்து அவங்களோட செட்டாகீட்டு இப்ப என்ன கழட்ட பாக்கிறாய் என்ன! இதான் உன்ர நட்பு! வருவாய் தானே ஏதும் காசு தேவயெண்டா அப்ப பாப்பம்'

'போடா #%^*$€! இப்ப உன்னோட கதைக்கேலாது ஃபோன வை! மனுசர் இருக்கிற விசருக்க %€^$*#'

செந்தமிழ் தேன் மொழியால் செந்தூரன் மீது செறிவான ஷெல் தாக்குதல் மேற்கொண்டபடி ஃபோனை கட் செய்கிறான்.

பஸ் வர்ற பாடா தெரியேல்ல பேசாம யார் வீட்டு மதிலாவது பாஞ்சு ஆர்ரயும் ரொய்லட்டுக்குள்ள பூருவமா? 

கள்ளனெண்டு ஆளபுடிச்சடிச்சாலும் பறவால்ல ஆனா நடு றோட்டில ஜீன்ஸிலயே போய் அவமானப்பட்டுடப்பிடாது!

மதிலேற சிவா ஜம்பண்ணும் போது 'அதுவும்' வெளிய ஜம்பண்ணிட்டா என்ன செய்யுறது?

மதில் பாய முடிவெடுத்த தருணம் ஒரு மினி பஸ் வரவே திட்டத்தை கைவிட்டு பஸ்சிலேறுவதாக தீர்மானிக்கிறான்.

இந்த இடத்தில் கே.கே.எஸ் வீதி மினி பஸ்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.

வெள்ளையில் பச்சை அல்லது சிவப்பு வண்ண கோடு உரிந்து மண்நிற தகரம் தெரிய ROSA என எழுதப்பட்டு உள்ளே கிழிந்த ஸ்பீக்கரில் எஸ்.ஏ.ராஜ்குமார் பாடலை ஒலிக்கவிட்டபடி வரும்.

வாசலில் சாம்பல் நிற மார்ட்டீன் சேட் போட்டு கையை சுருட்டி மடித்து கஸியோ மணிக்கூடு கட்டிய கறுப்பு மனிதர் ஒருவர் ஒற்றைக்காலில் தொங்கியபடி கை நடுவிரலில் தாள்காசை செங்குத்தாக மடித்து செருகிய படி மற்ற கையால் பஸ்ஸினுள்ளே எதயோ பிடித்து தொங்கியபடி 'வாற ஹோல்ட் இறக்கம்' என்று கூற உங்களருகில் மினி பஸ் வந்து நிற்கும்.

அருகில் வந்ததும் தான் மினிபஸ் கொண்டக்டரின் பக்கம் பயங்கரமாக சாய்ந்து நிற்பது உங்களுக்கு தெரியவரும்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த எல்லோருக்குமே ஃபக்ட்ரி'ல செய்யேக்கயே மினிபஸ்ஸை சாச்சு தான் டிசைன் பண்ணுவாங்களோ எண்ட சந்தேகமுண்டு!

யாழ்ப்பாணத்துக்கு விசிட் அடிப்பவர்கள் சொந்த வாகனத்தில் ரூரிஸ்ட்டாக சுற்றி பார்க்காமல் ஒரு முறையாவது மினிபஸ்சில் ட்ரவலர் ஆக பயணித்தீர்களானால், யாழ்ப்பாணத்தின் சராசரி மனிதர்களை உள்ளே காணமுடியும்.

இப்படி ஒரு மினிபஸ் தான் சிவா நின்றிருந்த குளப்பிட்டி பஸ்ஹோல்டை அடைகிறது.

பஸ்ஸ்ராண்டில் நின்னிருந்த ஏனய சிலர் வந்த பஸ்ஸின் ஜனத்தொகையை பார்த்துவிட்டு அடுத்த பஸ்ஸுக்காக பின்வாங்கினர்.

இவர்கள் ஆழ்மனதில் யாரோ 'மினிபஸ் வந்தா பின்னுக்கு சீற்ரீப்பி வரும்' என பலமாக நம்ப வைத்துள்ளார்கள்.

 கொண்டக்டர் சிவாவை பார்த்து

'உள்ள இடமிருக்கு ஏறுங்க' என்கிறார்.

அவர் அப்படி சொல்லும் போது தனது தொங்கி கொண்டிருக்கும் கால் அப்படியே இருக்க ஃபுட்போட்டில் இருக்கும் காலை சற்று நகர்த்தி பின்னால் வைப்பார் அதில் நமது வலது காலை வைத்ததும் மினிபஸ் புகை கக்கியபடி புறப்படும் அதையடுத்து நாம் கதவுக்கு மேலே கையை விட்டு துலாவும் போது அகப்படும் இரும்பு குழாயை உடனே பற்றிகொள்ள வேண்டும்.

இல்லையேல் நடுவீதியில் சடுதியாக 'பொத்'தென்று உட்கார வேண்டிய நிலையேற்படும் இதன் 'பின் வளைவுகள்' மோசமாகும்.

அப்படித்தான் நமது ஹீரோ சிவாவும் ஏறினான்.
சீட்ல இருக்கிற கனவு தான் பலிக்கேல்ல ஆனா பஸ் புறப்பட்டால் இந்த நிலமைக்கு முகத்தில் காத்து பட சுகமா இருக்கும் என நினைத்தவனுக்கு முகத்தில் வந்து மோதியதென்னவோ சக பயணிகளின் வியர்வை நாற்றம் தான்.

இந்த அதிஉச்ச உபாதையில் உள்ளே போனாலும் சராசரி ஆண்களால் மினிபஸ்ஸில் நிமிர்ந்து நிற்கமுடியாது என்பதால் புட்போட் பயணம் தொடர்கிறது.

அந்த நிலமையிலும் அவனை நிம்மதியாக அங்கே நிற்கவிட்டதா நம் சமுதாயம்?
ஒவ்வொரு இறக்கத்திலும் ஒவ்வொருவர் இறங்கி ஏறும் போதெல்லாம் சிவாவும் இறங்கி வழி விட வேண்டி வருகிறது.

ஒவ்வொரு இறக்கத்திலும் நிதானமாக இறங்க வேண்டியவர்கள் இறங்கிய பிறகே 'எங்க ஏறின்னீங்கள்' என விசாரித்து கல்குலேட் பண்ணி காசை வாங்குவார் கொண்டெக்டர்.

அதில் வரும் மீதி சில்லறைகளை பிறகு கொண்டக்டரும் ட்ரைவரும் ஓணருக்கு தெரியாமல் பிரிச்சு எடுப்பாங்கள் என ஓர் கதை உலாவுவதுண்டு.

அது கூட பரவாயில்லை இந்த ட்ரைவர் வேறு ஆமைக்கு பிறந்தவன் போல மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறான்.

ட்ரைவருக்கு இழுத்துவச்சு நாலு சாத்து்சாத்தோணுமெண்டு சிவா மனசுல சட்டுனு தோன்றினாலும்...

இறங்கினாப்பிறகு காசுகுடுத்த அதில பத்து செக்கன் போயிடும் என நினைத்தவன் பொக்கட்டுக்குள் இருந்த அம்பது ரூபாவை கொண்டக்டர் கையில் திணிக்கிறான்.

ஆடியாடி ரவுணை வந்தடைந்த சிற்றுந்து தன் இருப்பிடத்தை அடைகிறது அதிலிருந்து பக்த கோடிகள் 'மிச்ச காசு மிச்சக்காசு' என கோசமிட்டவாறு நடத்துனரை புடைசூழ சிவா சாதிக்கும் நேரம் நெருங்கிவிட்ட சந்தோசத்தில் நடக்க ஆரம்பிக்கிறான்.

'நில்லுங்க அண்ணை'

அவன் கொலரை இரும்புப்பிடி பிடித்தது ஒரு முரட்டு கை.

கொண்டக்கடர் இவன் தோழை பிடித்து நிறுத்தியருந்தார்.

'அண்ண நான் வரேக்கயே காசு தந்திட்டன், குளப்பிட்டில ஏறின்னான்' பாவமாக முகத்தை வைத்த படி சொல்கிறான் சிவா! கால் நடுங்கி வயிறு நொந்து மூளைக்குள் ஏதோ வலி பரவுகிறது.

'மிச்சக்காசு வாங்காம போறியள்'

'அத பிறகு வாங்... நீங்களே வச்சிரு... வேலைக்கு நேரம் போட்டு... முதலாளி பேசப்போறார்...'
நிஜமாகவே இப்போது அழுதபடி சொல்கிறான்.

அவரிடமிருந்து விடுவித்து கொண்டவன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல விரைகிறான் பேருந்து தரிப்பிட பொது கழிப்பறை நோக்கி.

சுத்தவர மக்கள் நடப்பது, ஆட்டோ உரசிச்செல்வது, ஒலிபெருக்கியில் இழுத்திழுத்து பேசும் நிக்சனின் கம்பீரமான விளம்பர அறிவிப்பு குரல், பழ வியாபாரிகளின் கையைபிடித்து பழத்தை திணித்து காசை வாங்கும் யாவார தந்திரங்கள் எதுவுமே அவன் சிந்தனையிலில்லை! அவன் கண்ணில் தெரிவது தான் நெருங்கிக்கொண்டிருக்கும் கழிப்பறை கதவு மட்டுமே!

இதையே துரோணாச்சாரியார் அர்ஜுணனுக்கு குருகுலக்கல்வியின் வில்வித்தை சிலபஸ்ஸில் 'ஒருமுக மனக்குவிப்பு' என்கிறார்.

ஆஹா நெருங்கீட்டான்! 

உள்ள திரும்பினா கதவு தான், கழிப்பறை காசு பத்துருவாக்காக நூறுரூபாவை கல்லாப்பெட்டியிலிருக்கும் பொறுப்பதிகாரியின்(!) கையில் திணிக்க அவர் முகம் அன்றலர்ந்த செந்தாமரை போலானது.

ஆனால் அடுத்த கணமே இவன் முகம் காஞ்ச எக்ஸோறா பூ போலானது.

காரணம் கதவடியில் இரண்டு பேர் ஏற்கனவே வெய்ட்டிங்கில் நின்று கொண்டிருந்தார்கள்.

உள்ளே இருப்பவன் தாமதப்படுத்துகிறான் போல!

இவனால் நிற்க முடியவில்லை, 
உள்ளேயிருப்பவன் இருந்திட்டு வந்தாலும் இவங்கள் ரெண்டுபேரையும் ஓரங்கட்ட என்ன செய்யலாம்!?

கொண்டெக்டருக்கு குடுத்த மாரி, கழிப்பறை காவலாளிக்கு குடுத்த மாரி பணத்தாலயே அடிச்சு விலைக்கு வேண்டுவமா?

அதற்கு இவர்கள் மசியாத நேர்மை கொசுக்களாக இருந்தால்..!?

துப்பாக்கி எடுத்து தீர்த்துக்கட்டிவிடலாம் என்றால் இவனிட்ட துவக்கும் இல்லை! இருந்திருந்தாலும் சுடத்தெரியாது.

கதவை தள்ளிக்கொண்டு உள்ள பூருவமா?

முடியாது கதவு உள்பக்கம் தாழ்ப்பாழ் போட்டிருக்குமே!

இங்கேயே ஜீன்ஸுடன் குந்திவிடுவோமா!

டிக்..! டிக்..! 
வினாடி முள் கூட நகர மறுக்கிறது.

கதவருகே காத்திருக்கும் மற்ற இருவரும் தமக்குள் கருத்து பகிர்கிறார்கள்.

'என்ன சீ எண்ட சீவியம்! யாழ்ப்பாணத்தில புத்த கோயில் கட்டுற அரசாங்கம் இதில இன்னும் ரெண்டு கக்கூச கூட கட்டியிருக்கலாமெல்லோ'

'நான் மன்னாரில இருந்து வந்திருக்கிறன் எப்ப யாழ்ப்பாணம் வந்தாலும் பஸ்ஸால இறங்கினவுடனயும் பஸ்ஸில ஏறமுன்னமும் கிரமமா இஞ்ச தான் வாறனான்' யாழ்ப்பாணத்து சுற்றுலா தலம் போல கட்டண கழிப்பறையை பற்றி மகிழ்ந்து புகழ்ந்தார்.

இவரது கூற்றால் மீண்டும் சிந்தனை வயப்பட்ட சிவா தன் கழிப்பறை அனுபவத்தை நினைத்து பார்க்கிறான்.

வீட்டை தவிர கட்டண கழிப்பறையாகட்டும் வேறு தங்கியிருக்கும் வாடகை அறை கழிப்பறை ஆகட்டும் ஒரு சிகரட்டுடன் தான் சென்று அமர்வான் கழிப்பறையின் பூக்கல்லில் இருக்கும் லைட்டரில் பற்றவைத்து சிகரட்டை உள்ளே இழுக்க ஆரம்பிக்க காலைகடன் ஆட்டோமெட்டிக்காக அற்புதமாக வெளியேறும்.

சிகரட் முடிய இவனும் வெளியேறுவான்.

கட்டணக்கழிப்பறையானால் உள்ளே சென்றதும் அந்த சொட்டு சொட்டாய் ஒருகும் தண்ணி பைப், அழுக்கு சுவர், பேசின் குழி, பாசி மற்றும் கல்சியம் படர்ந்த வாளி, கரியால் கிறுக்கப்பட்ட உள்ளூர் கலைஞர்களின் கைவண்ணங்கள் இவற்றை பார்த்தாலே எமதர்மராஜனுக்கே குமட்டும். 

உங்களுக்கு தேரம் சரியில்லையானால் உள்ளே தவளை, அட்டை, கரப்பொத்தான் அல்லது பல்லி, பெயர் தெரியாத மண்ணிறத்தில் கறுப்பு டிசைன் போட்ட பூச்சி என அந்த சீசனுக்கேற்ற பாத்ரூம்மேட்டையும் சந்திக்கலாம்.

சிவாவின் நண்பன் ஒருவனது அனுபவ பகிர்வின் படி அவன் ஜீன்ஸை சுருட்டி கையில் வைத்திருக்காமல் தோழில் இரு ஜீன்ஸ் கால்களும் முன்னால் தொங்குமாறு போட்டு வைத்து வலது ஜீன்ஸ் காலை தூக்கி இடது தோழின் முதுகுபுறமும் இடது காலை வலதுபுறமும் சுற்றியபடி அமர்வானாம்.

'அப்ப ஜட்டிய எங்க வப்பாய்?' எண்டு கேட்டால் உதுக்கெல்லாம் மண்டைய பாவிக்கோணும். 'தலையில கவிட்டு போட்டிருப்பன்' என்று பதில் வருமாம்.

சிவா வழக்கமாக பொது கழிப்பறை உள்ளே சென்று ஈர தரையில் செருப்பை கழற்றி அதன்மேல் ஏறி நின்று ஜீன்ஸை மடித்து முழங்கால் வரை விட்ட்பின் கழட்டி உள்ளாடையையும் கழட்டி சுற்றி கையில் வைத்தபடி மறுகையில் சிகரட்டை பிடித்தபடி அமர்வான்.

'சர்..! புர்..!! டுர்ர்ர்!!!'

என்னடா இது சிந்தனை நடுவே சர்..! புர்..!! டுர்ர்ர்!!! என ஓர் சத்தம் என நாம் எதிர்பார்த்தபடி சந்தேகத்துடன் தன் ஜீன்ஸின் பின்புறம் திரும்பி சோதித்தான் கழிப்பறை வாசலில் நின்றிருக்கும் சிவா.

இன்னமும் பீரங்கி வெடிக்கவில்லை என்பது உறுதியானதும் மற்றவர்களை நிமிர்ந்து பார்த்து தன் தேரத்தை வீண்டிக்க விரும்பாதவனாய் பழையபடி சிந்தனைக்கே செல்கிறான்.

உள்ளே சிகரட்டுடன் சென்று அலுவல் முடிந்ததும் கமக்கட்டுக்குள் சுற்றிய ஆடைகளை செருகிவைத்தபடி கழுவிவிட்டு மீண்டும் செருப்பிலேயே நின்றபடி உள்ளாடையை அணிந்துவிட்டு ஒரு காலை தூக்கி ஒரு ஜீன்ஸ் போடலாம். அது சுலபம்.

அடுத்த கட்டம் தான் படு ஆபத்தானது மறுகாலை ஜீன்ஸ் குழாயினுள் நுளைக்கும் போது பலன்ஸ் தடுமாறி கால் அந்த ஈரநிலத்தில் பட்டாலோ, கை சப்போட்டுக்காக சுவரை தொட்டாலோ, ஜீன்ஸ் நுணி தரையில் பட்டாலோ போச்!

அலர்ஜி ராஷஸ் அப்பிடி இப்பிடின்னு பதினோருவகையான ஸ்கின் ப்ரப்பளங்கள் வந்திரும்.

ஏன் தண்ணீர் குழாயையோ வாழியையோ கையால் தொடுவது கூட கொடிய பாதகமான ஆபத்தான செயல்பாடு தான் என்பது ஆழ்மனது நம்பிக்கை.

அந்த சுகந்த வாசத்தில் நாம் வந்த வேலையை பார்ப்பதற்கு சிகரட் மணம் அவசியம் தான் என்பது சிவாவின் கருத்து.

ஏன் சில மூதேவியள் வெறீல உள்ள போய் சாக்கு கட்டில்ல கிடக்கிற நினைப்பில குப்புற விழுந்து கிடக்கிறதுகளும் இருக்கு!

சிவாவின் சிந்தனை மீண்டும் காத்திருக்கும் கழிப்பறை வாசலில் வந்து நின்றபோது கதவு திறந்தே இருந்தது!

அட இந்த இடைவெளியில் காத்திருந்த அனைத்து பயனர்களும் கடமையை முடித்து வெற்றிகரமாக தரையிறக்கி சென்றிருக்கிறார்கள்!

ஓ அதான் யோசித்து கொண்டிருக்கும் போது நடுவே 'சர்..! புர்..!! டுர்ர்ர்!!!' என சத்தம் வந்ததா!?

இப்போ நம் ஹீரோ தான் கிங்!
ஒன் மான் ஷோ!!
தனி ஒருவன்!!!
சோலோ பர்ஃபாமன்ஸ்!!!
தடை போட யாருமில்லை!

பந்தாவாக உள்ளே நுளைகிறான்.

கதவு சடாரென சாத்தபடுகிறது.

ஆனால் தாழ்ப்பாழ் போடமுடியவில்லை! இறுதி சோதனை!!

அதனால் என்ன குந்தியபடியே குனிஞ்சு தலையால முட்டுக்குடுத்துக்கொண்டே வந்த வேலையை முடிப்போம் என ப்ரஸன்ஸ் ஒஃப் மைண்ட்'ல் முடிவெடுக்கிறான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஆடைகள் விடைபெற்றுக்கொள்ள...!

இந்த தடவை பலன்ஸ் பார்த்து அங்குமிங்கும் முட்டு படமல் உட்கார அவகாசம் கிடைக்கவில்லை! வருவது வரட்டும்! போவது முதலில் போகட்டும்!!

ம்...! ஆஷ்...! ஸ்ப்பா..!!!

இதற்கு தானே ஆசைப்பட்டாய் சிவா!

பெருமூச்சு.

நிலவில் கால்வைத்த நீல் ஆம்ஸ்ரோங்கை விட அதிக பெருமிதம் சிவாவின் முகத்தில்.

இப்போது தான் கண்ணுக்கு உலகம் தெரிய ஆரம்பிக்கிறது சிவாவுக்கு.

காசு பணம் சேத்து என்னத்த..! மனுசருக்கு நிம்மதி வேணும்ப்பா!! என நினைத்தவனுக்கு அந்த பாசி படர்ந்த ஒழுகும் தண்ணீர் குழாயை கையால் தொட சங்கோஜமாயிருந்தது.

சேட் பொக்கட்டுக்குள் கைவிட்டால் ஒரு 20 ரூபா தாள் கிடைத்தது, அதை பைபின் திருகிமேல் மடித்து போட்டு கைபடாமல் மென்வலுவை பிரயோகித்து பைப்பை திருகினால் சரியாக நாலு சொட்டு ஒழுகிவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டது தண்ணீர்க்குழாய்.

குழாயில் தண்ணீர் வரவில்லை!

இதே நேரம் மறுபுறம்

வேலை இருந்ததால் நானும் குளப்பிட்டி வீட்டுக்கு வந்து சேந்ந்திருந்தேன்.

சிவா ஃபோனில் திட்டியதால் அவனுடன் சண்டை பிடிக்க செந்தூரனும் அங்கு கோபத்துடன் தேடி வந்துவிட்டான்.

இவன் சொல்லாம கொள்ளாம எங்க போனவன் எண்டு மொப்பர் வாளிய வேண்டினவனும் முளிக்க...

இங்கு கழிப்பறையில் சிவா தண்ணீர் குழாயுடன் போராடிக்கொண்டிருக்கிறான்.

திண்மம் திரவம் வாயு அனைத்தும் நீரின்றி காய்ந்து போக...

சோதனை மேல் சோதனை!!!

நெஞ்சில் நேர்மை துடிக்க கண்ணில் மின்னல் வெடிக்க நேரம் வரும் ஜெயிக்க என தீயாய் எழுந்தவன் இடுப்பளவு பகுதியை மட்டும் கதவுக்கு வெளியே நீட்டி கத்துகிறான்.

'அண்ண தண்ணி வரூதில்ல! டேய் ஆர் வெளீல? முன்னுக்குருக்கிறவரிட்ட தண்ணி வரூதில்லயாம் எண்டு சொல்லிவிடுங்க'

முன்னுக்கிருக்கிறவருக்கு இவன் வரும் போதே காசால அடிச்சி ஆள விலைக்கு வேண்டீட்டானெல்லோ, அவன் இவன்ட கட்டளை கிடைச்சதும் எங்கோ சட்டென எழுந்து நிதானமாக நடந்து சென்றான்.

அவ்வளவுதான் பத்தே நிமிடத்தில் பீய்ச்சியடித்தது குழாயில் தண்ணீர்.

வெற்றிகரமாக களமாடிய மாவீரன் இப்போது கர்வமாக நடந்து கழிப்பறையைவிட்டு வெளியேறுகிறான்.

மீண்டும் பஸ்ஸில் குளப்பிட்டி புறப்படுகிறான்.

முப்பத்திரெண்டு பல்லும் வெளிய தெரிய ஆனந்தமாக வந்து சேர்கிறான் சிவா.

வந்து அமர்ந்தவனை சட்டையில் பிடித்த செந்தூரன்.

'டேய் சிவாப்%#^*$! நான் உனக்கு வேலை வாங்கி தந்தனான், நான் உனக்கு கடன் தாறனான், நான்தான் உனக்கு யாழ்ப்பாணத்திலயே முதல் நட்பு ஆனா நீ என்ன போன்ல பேசிப்போட்டாய் என்ன?'

அதுக்கு சிவா சொன்ன பதில் தான் மேலே நீங்கள் படித்தவை!

இதுக்கு செந்துரன் சொன்ன பதில்
'எட காட்டுவாசி முன்னால குளப்பிட்டி சந்தைக்குள்ள புதுசா ரொய்லட் கட்டி வச்சிருக்கிறாங்கள்.
நீ ஏன் பஸ் எடுத்து போய் இருந்திட்டு வந்தனி?'

அந்த நேரம் சிவான்ட முகத்த பாத்திருக்கோணுமே!

இப்போதும் எப்போதாவது யாழ்ப்பாணம் வந்தால் அல்லது போன் செய்து 'கிருத்திகன் நீங்கள் குறும்படம் எடுக்கிறனீங்கள் தானே இந்த கதைய எடுங்கோவன் நான் ப்ரடியூஸ் பண்ணுறன்' என்பான்.

என்னடா இப்பிடி ஒரு கண்றாவியான கதைய படிச்சிட்டமே எண்டு நீங்க ஃபீல் பண்ணினா நீங்க நினைச்சது சரிதான். ஏன்னா நமது தமிழ் சமூகத்தின் உண்மையான மனநிலை இது தான்.

இதனாலேயோ என்னவோ தமிழர்கள் பூமியின் முதல் இனமாயிருந்தாலும் பல்லாயிரம் வருட பழமையான கட்டடக்கலை மரபை கொண்டிருந்தாலும் தமிழர் பிரதேசங்களில் கோயில், கடைகள், விளையாட்டிடங்கள் எங்குமே கழப்பறை வசதிகள் ஏற்படுத்துவதோ அதை சரியாக பராமரிப்பதோ கிடையாது.

தமிழன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உலகே மூக்கின் மேல் விரலை வைக்குமளவுக்கு தஞ்சை பெருங்கோவிலை கட்டியிருந்தாலும் நமது வெஸ்டன் டாய்லெட், ஈஸ்டன் டாய்லெட் அனைத்து கட்டுமானங்களும் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தியதாலேயே 'மூக்கின் மேல் விரல் வைக்கும்' இந்த பத்தியை நீங்கள் படிக்க வேண்டி வந்திருக்கிறது.

என்ன தான் நாங்கள் ஆண்ட பரம்பரையாக இருந்தாலும் காடுகளில் தான் பேண்ட பரம்பரை என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

இதனால் தானோ என்னவோ ஆரம்ப காலத்து புலம்பெயர் தமிழர்கள் அனைத்து நாடுகளிலும் பார்த்த முதல் வேலை கழிப்பறை சுத்தம் செய்வதாக இருந்தது.

அந்த பணத்தில் தான் இங்கு  திருவிழாகளில் உறவுகளின் கழுத்திலும் கையிலும் தங்கம் மின்னியது.

அதிலும் இங்கு குழியில் குந்தியிருக்கும் முறையில் பிறந்தது முதல் 'இருந்து' விட்டு தாயின்ர தாலிக்கொடிய அடகு வச்சு அந்த காசில பாஸ் போட்டுக்காக முதன் முதல் கொழும்பு போன ஒருத்தன் அப்போது தான் அங்கே முதன் முதல் கொமட்டை கண்டவன் அதில் எப்பிடி 'இருப்பது' என தெரியாமல் அதன் கோப்பையின் இருபுறமும் காலை வைத்து குந்தியிருக்கப்போய் அரைவாசி காரியம் ஆனபின் பீங்கான் உடைந்து கால் உள்ளே போய்... உவ்வேக்!

பிறகு பாஸ் போட் சரிவந்து வெளிநாடு போய் அடுத்த வரியம் தாய்க்காறிக்கி போன் பண்ணினானாம்.

'அம்மோய் உங்க வாற எண்டா கொமட் ஒண்டு கட்டினாதான் ஒரு மாசம் நிக்க ஏலும், இல்லாட்டி சரிவராது.
இங்க அதில இருந்திருந்து பழகீட்டுது. காசனுப்புறன் கட்டுங்கோ'

ஆனா கடைசி மட்டும் அப்பவும் தான் வெளிநாட்டில கக்கூஸ் கழுவுற வேலை தான் செய்யுறன் எண்டத தாய் மனுசிக்கு கூட சொல்லேல்ல!

இப்ப அவன் ஒரு வெளிநாட்டு மாப்பிளை.

ஊருக்கயே வடிவான வாத்தீண்ட ஒரு பெட்டய இந்தியாவில கூப்புட்டு கட்டி வெளிநாட்டுக்கும் எடுத்துட்டான்.

போன வருசம் கோயில் திருவிழாக்கு வந்தவன் பொழுது போகாம கோண்டாவில் உப்புமடம் சந்தீல இருக்கிற தேத்தண்ணி கடைக்கு போன இடத்தில கடைக்காறன் ஸ்ரைலா உயரமா தேத்தண்ணி ஆத்தி ஊத்துறத பாத்திட்டு சொன்னானாம்...

'அங்க கனடாவில எல்லாம் உப்புடி உயத்தி ஊத்தினா தேத்தண்டி குளிருக்கு கட்டியாயீடும்!'

கடுப்பான கடைக்காரப்பெடியன் கேட்டானாம்...

'அப்ப மூத்திரத்த என்ன முறிச்சு முறிச்சோ எறியிறனியள்?'

ஆண்கள் பரவாயில்லை இப்போதும் சிறுநீர் கழிக்க சர்வசாதாரணமாக வீதியோரம் ஒதுங்கலாம் பெண்கள்!?

சுற்றுலா செல்லும்போதோ, வேலை தளங்களிலோ, உறவினர் விருந்துகளிலோ தமிழ் பெண்கள் ஏன் அதிகம் நீர் அருந்துவதில்லை என நாம் எப்போதாவது சிந்தித்து பார்த்திருக்கிறோமா?

'அவள் ஏன் தண்ணி குடிக்கிறாளில்ல? ஏன் எப்பவும் கொஞ்சமாக தண்ணி குடிக்கிறாள்' என கேணைத்தனமாக அக்கறையுடன் கேட்கும் ஆண்களுக்கு பதில் கிடைக்காத்தன் காரணமும் இதுவே!

கழிப்பறையில் 'இருந்த' போதே உலகையே புரட்டிப்போட்ட 'ஐடியாக்கள்' பல உதித்ததாக அறிஞர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள் பலர் கூறியுள்ளனர்.

இன்றய இளைஞர் யுவதிகளில் கழிப்பறையில் இருந்தபடி சட் செய்வோர், கண்டி க்ராஷ் விளையாடுவோர், பேஸ்புக் பார்ப்போர் அனேகர்.

இப்ப உங்கள் மனதில் ஒரு வினா எழுந்திருக்கும். இந்த மாதிரி ரொப்பிக்ல எழுத இவன தூண்டினது எதுவா இருக்கும்?

இரவு பஸ்ஸில கொழும்பு போய்கொண்டிருக்கிறோம், முருகண்டியில் தண்ணிபோத்தல் வாங்கி குடிச்சுட்டு நடுவழியில் அடம்பிடித்து பஸ்ஸ நிறுத்தி மரத்துக்கருகில் ஒதுங்கிய பெரியவரின் செய்கையை பார்த்து இவை ஞாபகத்துக்கு வர நண்பர்களுக்குள் பேசிக்கொண்டதை 'ரப்'ல் ரைப் செயகிறேன்.

நன்றி.
- கிருத்திகன்.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Related Posts with Thumbnails